இறைவனுக்கு அபிஷேகம் செய்தல் என்பது வழிபாட்டில் மிக முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. இதனால் பல்வேறு நன்மைகள் உண்டாகிறது என்பதை எவராலும் மறுக்க இயலாது. இறைவனுக்கு எந்தெந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் என்னென்ன நன்மைகள் விளையும் என்பதை ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருப்பது அவசியம். இதோ உங்களுக்காக அபிஷேகம் செய்வதால் உண்டாகும் நன்மைகள் : * தூய்மையான நீரால் அபிஷேகம் செய்தால், நினைக்கின்ற காரியங்கள் நிறைவேறும். * நல்லெண்ணெயால் அபிஷேகம் செய்வதன் மூலம், நம் வாழ்க்கை சுவை மிகுந்ததாகவும், சுகம் நிறைந்ததாகவும் அமையும். * பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் உடல் நலம் சிறப்புடன் காணப்படும். அத்துட்டன், தேவையான செல்வங்களும் சேரும். * பசும் பாலினால் அபிஷேகம் செய்தால் புத்திர விருத்தியும், இளநீரால் அபிஷேகம் செய்தால் குடும்ப நலனும் ஏற்படும். * பசுவின் பால், தயிர், நெய், கோமயம், சாணம் ஆகியவை அடங்கிய பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் செய்தால் பாபங்கள் நிவர்த்தியாகும். * நெல்லி முள்ளைப் பொடி செய்து அபிஷேகம் செய்தால், நோய்கள் நீங்கப் பெறுவோம்; தேனில் அபிஷேகம் செய்தால் வாழக்கை இன்பமயமாகும். * வாழைப்பழத்தால் அபிஷேகம் செய்தால் பயிர்கள் செழிக்கும்; அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் ராஜ போக வாழ்வைப் பெறுவோம். * சந்தனத்தினால் அபிஷேகம் செய்வோமாயின் எட்டுவித செல்வங்களைப் பெறுவோம். இறைவனுக்கு எந்தெந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் என்னென்ன நன்மைகள் விளையும் என்பதை தெரிந்து கொள்ளும் அதேவேளையில், அபிஷேகம் செய்வதற்கான உகந்த கிழமைகளையும் அறிந்து கொண்டு செயல்படுவோமாயின் மேலும் நன்மை விளையும். ஞாயிற்றுக்கிழமை விநாயகர் மற்றும் நவ கிரகங்களுக்கும், திங்கட் கிழமை சிவ பெருமானுக்கும் அபிஷேகம் செய்தல் வேண்டும். செவ்வாய், புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் முறையே முருகன், விஷ்ணு, தட்சிணா மூர்த்தி ஆகியோருக்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். வெள்ளிக்கிழமை அம்பாளுக்கும் சனிக்கிழமை கண்ணபிரான் மற்றும் அவரது அவதாரங்களுக்கும் அபிஷேகம் செய்தல் நன்மை பயக்கும். திருக்கோயில்களில் செய்யக் கூடாதவை எவை: கோயிலுக்குச் செல்லும் போது, நம்மையும் அறியாமல் சில தவறுகளை செய்கிறோம். ஆதலால், கோயிலில் செய்யக் கூடாத அல்லது கடைபிடிக்கக் கூடாதவைகளை தெரிந்து கொண்டால் நாம் வணங்கும் கடவுளின் முழுமையான அருளை பயனைப் பெற முடியும். * பிரகாரம் வலம் வரும்போது வேகமாக நடக்கக் கூடாது * வீண்வார்த்தைகளும், தகாத சொற்களும் சொல்லக் கூடாது * பிறப்பு, இறப்பு தீட்டுகளுடன் செல்லக் கூடாது * கோயிலுக்குள் தூங்கக் கூடாது * கொடிமரம், பலிபீடம், நந்தி கோபுரம் இவைகளின் நிழலை மிதிக்க கூடாது * விளக்கில்லாமல் இருட்டில் வணங்கக் கூடாது * ஒரு கையால் தரிசனம் செய்யக் கூடாது * மேலே துண்டு போட்டு வணங்கக் கூடாது * கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது * சண்டேஸ்வரிடம் துணியிலிருந்து நூல் கிழித்து வைக்கக் கூடாது * ஈர ஆடையுடனும், ஓராடையுடனும் தெய்வ வழிபாடு செய்யக் கூடாது * சந்நிதியில் தீபம் இல்லாத போது வழிபடக் கூடாது * மூலவர் மற்றும் அம்பாள் ஆகிய திருவுருவங்களுக்கு அபிஷேகம் நடைபெறும் பொழுது உட்பிரகாரத்தில் வலம் வரக் கூடாது. * கோயிலுக்குள் இருந்து வீட்டுக்கு திரும்பிய உடனே, கால்களைக் கழவ கூடாது, * அஷடமி,நவமி, அமாவாசை, பவுர்ணமி, சோமவாரம் ஆகிய நாட்களன்று வில்வ இலைகளை பறிக்க கூடாது.






