ஆடி மாதம் தக்ஷியாயனம் ஆரம்பமாகிறது. ஆண்டினை இரண்டு அயனங்களாகப் பிரிப்பர். ஆடி முதல் மார்கழி வரையிலான தக்ஷியாயனமும், தை முதல் ஆனி வரை உத்ராயனமும் ஆகும்.
ஒன்று மழைக் காலத்தின் துவக்கத்தையும், மற்றொன்று கோடைக் காலத்தின் துவக்கத்தையும் குறிக்கிறது.
ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் துவக்கமே ஏற்படுகிறது. ஆடி துவங்கினால் போதும் பண்டிகைகளின் பட்டியலும் துவங்கிவிடும்.
பூமா தேவி அவதரித்த ஆனந்த மாதமும் இந்த ஆடி மாதம்தான். அதாவது ஆண்டாள் அவதரித்த அந்த நன்னாள் தான் ஆடிப் பூரமாகக் கொண்டாடப்படுகிறது.
மேலும், ஆடிப் பதினெட்டு அல்லது ஆடிப் பெருக்கு என்றும் நாம் கொண்டாடடுகிறோம். அந்த நாளில் முன்பெல்லாம் காவிரியும், தாமிரபரணியும், வைகையும் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும். அதுவே ஆடிப் பெருக்காகக் கொண்டாடப்பட்டது.
இந்த மாதத்தில் கிராமத்தில் காவல் தெய்வங்கள், குல தெய்வங்கள், கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
இந்த ஆடி மாதத்தில் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வழிபட்டால் அம்மன் அருள் கிட்டும் என்பது நம்பிக்கை.






